ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி திமுக அதிமுக என இரு கட்சியிடையேயும் இழுபறியாகவே நீடித்தது. இந்த நிலையில், இரண்டு கட்சிகளும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவித்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பா.ம.க-வுக்கு 18 தொகுதிகளும், டிடிவி தினகரன் தலைமையிலான அ.மு.மு.க-வுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 2 தொகுதிகளும், ஜான் பாண்டியனின் த.ம.மு.க கட்சிக்கு 1 இடமும், திருமாறனின் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நேற்று (மார்ச்.24) தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பான விவரங்களையும் வெளியிட்டிருக்கிறார்.
