மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலோடு சேர்ந்து மொத்தம் 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் நடக்க இருக்கும் இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பரபரப்பான சூழலில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரான லியாண்டர் பயாஸ் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார்.
அவர் இன்று டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் கிரண் மற்றும் சுகந்தா ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கட்சியில் சேர்ந்த பிறகு லியாண்டர் பயாஸ் அளித்த பேட்டியில், “நாட்டின் இளைஞர்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தருணம் எனது வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வாய்ப்பிற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
கட்சியில் சேர்ந்தது ஒரு உறுப்பினராக மட்டுமல்லாமல் தேசத்திற்கு சேவை செய்யும் முக்கிய பொறுப்பு இருப்பதால் சேர்ந்துள்ளேன். நான் மேற்கு வங்கத்தில் பிறந்து, பெங்காலி பாரம்பர்யத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது”‘ என்று குறிப்பிட்டார்.
லியாண்டர் பயாஸ் தாயார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஆவார். சமீபத்தில் பா.ஜ.க தலைவர் நிதின் நபினை கொல்கத்தாவில் லியாண்டர் பயாஸ் சந்தித்துப் பேசினார். அதனை தொடர்ந்து பயாஸ் பா.ஜ.க-வில் சேர்ந்து இருக்கிறார். அவருக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
