பாட்னா: ”நான் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட உள்ளேன். பீஹாரில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு என் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும்,” பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிதிஷ் குமார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, பீஹார் மக்கள் தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறார்கள். இதனால் தான் நாங்கள் பீஹார் மக்களுக்காக முழுமையான விசுவாசத்துடன் சேவை செய்து வருகிறோம். உங்கள் நம்பிக்கை மற்றும் ஆதரவின் காரணமாகவே பீஹார் மாநிலம் இன்று வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதற்காக கடந்த காலங்களில் பலமுறை உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட உள்ளேன். பீஹாரில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு என் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் இருக்கும். இவ்வாறு நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
10 முறை
10 முறை பீஹார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமார், தேசிய அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். இவர் ஏற்கனவே, பீஹார் சட்டசபை, சட்ட மேல்சபை, லோக்சபா உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது ராஜ்யசபாவுக்கு தேர்வான பிறகு, நான்கு சபைகளிலும் உறுப்பினராக இருந்த தலைவர்களில் ஒருவராக நிதிஷ் குமார் திகழ்வார்.
போராட்டம்
முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராஜ்யசபா எம்பி ஆக தேர்வு செய்யப்படுவதற்கு எதரிப்பு தெரிவித்து, பீஹாரில் நிதிஷ்குமார் வீடு முன்பு திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
