ஹவானா: கியூபா பாட்மின்டன் தொடர் ஒற்றையரில் இந்தியாவின் நிதின் ராகவேந்தர் சாம்பியன் ஆனார்.
கியூபா தலைநகர் ஹவானாவில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. இந்திய வீரர் நிதின் ராகவேந்தர் 20, பங்கேற்றார். உலகத் தரவரிசையில் 710 வது இடத்திலுள்ள, தமிழகத்தை சேர்ந்த இவர், ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு முன்னேறினார்.
இதில் கியூபா வீரர் ராபர்ட் கார்லஸ் வர்குயிசை (313 வது இடம்) எதிர்கொண்டார். முதல் செட்டை 17-21 என இழந்தார். பின் சுதாரித்த இவர், அடுத்த செட்டை 21-13 என வசப்படுத்தினார். மூன்றாவது, கடைசி செட்டில் போராடிய நிதின் ராகவேந்தர், 23-21 என கைப்பற்றினார்.
53 நிமிடம் நீடித்த இப்போட்டியில் நிதின் ராகவேந்தர், 17-21, 21-13, 23-21 என வென்று, சாம்பியன் ஆனார். கடந்த 2024ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த ஜூனியர் தொடரில் சாம்பியன் ஆன இவர், முதன் முறையாக ‘சீனியர்’ தொடரில் சாதித்துள்ளார்.
