பார்லி.,யில் ராகுலின் நடத்தையை கண்டித்து முன்னாள் ஐ.ஏ.எஸ்.,கள் உட்பட 204 பேர் கடிதம்

புதுடில்லி: ‘பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் என்ற பெயரில் படிக்கட்டில் அமர்ந்து டீ, பிஸ்கட் சாப்பிடுவது எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் அகந்தையை காட்டுகிறது. இந்த செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, முன்னாள் ஐ.ஏ.எஸ்., மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட 204 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

பார்லிமென்ட் வளாகத்தில் கடந்த 12ல் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் படிக்கட்டுகளில் அமர்ந்து டீ, பிஸ்கட் சாப்பிட்டார்.

ராகுலின் இந்த நடத்தையை கண்டித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., ராணுவ அதிகாரிகள், துாதர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என, 204 பேர் திறந்த கடிதம் வெளியிட்டுள்ளனர்.

கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: லோக்சபா சபாநாயகர் தடை விதித்திருந்தும் பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் போராட்டம் நடத்தி உள்ளார். இது பார்லிமென்டின் அதிகாரத்தை புறக்கணிக்கும் செயல்.

ராகுல் மற்றும் சில எம்.பி.,க்கள் பார்லிமென்ட் படிகளில் அமர்ந்து தேநீர், பிஸ்கட் சாப்பிட்டது, எம்.பி.,க்களுக்கு ஏற்ற நடத்தையாக இல்லை. பார்லிமென்ட் படிகள் அரசியல் நாடகம் நடத்தும் இடம் அல்ல.

தனிப்பட்ட அரசியல் நாடகத்துக்காக ராகுல் அரசியல் சாசனத்தின் மாண்பை தாழ்த்தியுள்ளார். இந்த நடத்தைக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். இது நெறிமுறைகளை மீறும் அகந்தை மனப்பான்மையை காட்டுகிறது. லோக்சபா, ராஜ்யசபா அரங்குகளுக்கு வழங்கப்படும் மரியாதை பார்லிமென்ட் வளாகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும்.

அங்கு நடக்கும் செயல்கள் கண்ணியத்தை பிரதிபலிக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் இத்தகைய நடவடிக்கைகள், ஜனநாயக அமைப்புகளுக்கு மரியாதை குறைவையும், பார்லிமென்டை, விவாதங்களுக்கு பதிலாக அரசியல் மேடையாக பயன்படுத்தும் போக்கையே காட்டுகின்றன. எம்.பி.,க்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Source link