பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது. கேரள மாநிலம்,

பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெம்மாரா நெல்லிக்குளங்கரை பகவதி அம்மன் கோவிலில், பங்குனி மாத, ‘வேலா’ திருவிழா, நேற்று, வெகு விமர்ச்சியாக நடந்தது. காலையில், பள்ளிவாள் கடயல் நிகழ்ச்சியுடன் கோவிலில் ஆச்சார சடங்குகள் நடந்தன. அதன்பின், கணபதி ஹோமம், வரியோலை வாசிப்பு, நெல் பறை எடுப்பு நடந்தன. பகவதி அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தன.

காலை, 11:00 மணிக்கு சோற்றானிக்கரை சுபாஷ் நாராயண மாரார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்ச வாத்தியம் முழங்க, யானைகள் அணிவகுப்பில் அம்மன் எழுந்தருளி திருவீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார்.

மாலை, 4:30 மணிக்கு கலாமண்டலம் சிவதாசனின் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற செண்டைமேளம் முழங்க, ஆடை ஆபரணங்கள் அணிந்து முத்து மணி குடைகள் சூடிய, 11 யானைகள் கோவில் வாசல் முன் அணிவகுத்து நின்று, குடை மாற்றம் நிகழ்வு நடந்தது.

அதேபோல், கோவில் எதிரில் உள்ள மைதானத்தில் வல்லங்கி பிரிவினரின் பெருவனம் சதீசன் மாரார் தலைமையிலான, 50க்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள், பாண்டி மேளம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்து முத்து மணி குடைகள் சூடிய, ஒன்பது யானைகள் அணிவகுத்து நின்றுள்ள குடை மாற்றம் நிகழ்வு நடந்தது.

இதை பலர் கண்டு மகிழ்ந்தனர். மாலை, 6:30 மணிக்கு விழாவின் சிறப்பு அம்சமான பிரமாண்ட வாணவேடிக்கை நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும், வெளிநாட்டினரும் பங்கேற்றனர்.

Source link