ஓசூர்: பாலியல் சித்ரவதைக்கு ஆளான இரண்டரை வயது குழந்தை பலியான சம்பவத்தில், தாயின் கள்ளக்காதலனான தி.மு.க., இளைஞரணி கிளை செயலர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த ஜேசுராஜபுரம் பஞ்., கவுண்டன்கொட்டாயை சேர்ந்த, 24 வயது பெண்ணுக்கு, இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது.
கணவரை பிரிந்து, தாய் வீட்டில் வசித்த அப்பெண், கடந்த ஆண்டு டிச., 11ல் குழந்தைக்கு வலிப்பு வந்ததாக கூறி, அஞ்செட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்து விட்டதாக கூறினர்.
குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக, அப்பெண்ணின் கணவர் அளித்த புகார்படி, அஞ்செட்டி போலீசார் விசாரித்தனர். உடற்கூராய்வு அறிக்கையில், குழந்தையின் உடலில் உள்காயங்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், குழந்தை பாலியல் சித்ரவதைக்கு ஆளானதால், இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெரியநாயகம், 40, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
இறந்த குழந்தையின் தாய்க்கும், ஜேசுராஜபுரம், கோம்மைகாடு கிராமத்தை சேர்ந்த தி.மு.க., இளைஞரணி கிளைச்செயலர் பெரியநாயகத்திற்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.
அப்பெண் வீட்டில் இல்லாத நேரத்தில், பெரியநாயகம் , குழந்தையை பாலியல் தொந்தரவு செய்ததும், இதில், குழந்தை உடல்நலம் பாதித்து இறந்ததும் தெரிந்தது-.
பெரியநாயகத்தை கைது செய்துள்ளோம். அவர் மீது, இறப்பை ஏற்படுத்தும் வகையில், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ பிரிவில் வழக்கு பதியப்பட்டது. இவ்வாறு கூறினர்.
