பிஜாப்பூர்: சத்தீஸ்கரில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, தேடப்பட்டு வந்த 108 நக்சல்கள் போலீசில்

பிஜாப்பூர்: சத்தீஸ்கரில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, தேடப்பட்டு வந்த 108 நக்சல்கள் போலீசில் சரணடைந்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் மற்றும் 3.61 கோடி ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

வேட்டை தீவிரம்

‘இம்மாதம் 31ம் தேதிக்குள் நாட்டில் உள்ள நக்சல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவர்’ என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதையடுத்து சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் நக்சல் வேட்டை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கரில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட சி.பி.ஐ., மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த 108 நக்சல்கள் போலீசில் சரணடைந்தனர். இவர்களை பிடித்து கொடுத்தால் மொத்தம் 3.95 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.

சி.பி.ஐ., மாவோயிஸ்ட் அமைப்பில் பிஜாப்பூர் பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வந்த 37 நக்சல்கள், தண்டேவாடாவை சேர்ந்த 30 பேர், சுக்மாவை சேர்ந்த 18 பேர், பஸ்தாரை சேர்ந்த 16 பேர், நாராயண்பூரை சேர்ந்த 4 பேர், காங்கரை சேர்ந்த மூவர் என, தண்டகாரன்யா சிறப்பு மண்டல குழுவை சேர்ந்த இவர்கள், ஜக்தல்பூரில் சரணடைந்தனர். சரணடைந்த மண்டல அளவிலான மாவோயிஸ்ட் இயக்க கமாண்டர்கள் ஆறு பேர் தலைக்கு, தலா 8 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.

முதன்முறை

சரணடைந்த நக்சல்கள் அளித்த தகவலின் படி அவர்கள் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி, வெடிபொருள் போன்றவற்றுடன், 3.61 கோடி ரூபாய் பணம் மற்றும் 1 கிலோ தங்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப் பட்டன. நக்கல் இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரே இடத்தில் அதிகபட்ச பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதன்முறை.

Source link