பிரசாரத்திற்கு வருவாரா ராகுல்?

புதுடில்லி: நடிகர் விஜயின் த.வெ.க., உடன் கூட்டணி அமைக்க, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்பினாலும், கடைசியில் தி.மு.க., கூட்டணியிலேயே இருக்க காங்., தலைமை முடிவெடுத்தது. இதில் ராகுலுக்கு உடன்பாடில்லை என பேசப்பட்டது. அவருக்கு, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க விருப்பம். ஆனால், சோனியாவின் கட்டளைக்கு உட்பட்டு அமைதியாகி விட்டார்.

தி.மு.க., – -காங்., கூட்டணி அமைந்தது குறித்து, ராகுல் இதுவரை எந்த கருத்துமே தெரிவிக்கவில்லை. இதற்கிடையே இன்னொரு பேச்சும் காங்., தலைமை அலுவலகத்தில் உலவுகிறது.

‘காங்., போட்டியிடும் தொகுதிகளில், த.வெ.க.,விற்கும், காங்கிரசுக்கும் ஒரு ரகசிய உடன்பாடு ஏற்படும்’ என்கின்றனர் காங்., தலைவர்கள். இது தொடர்பாக, காங்., தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, த.வெ.க.,வுடன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.

‘இவர் தான் தி.மு.க., வேண்டாம்; த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்’ என பாடுபட்டவர். இந்நிலையில், ‘தமிழகத்தில் தி.மு.க., – -காங்., கூட்டணிக்காக ராகுல் பிரசாரம் செய்வது சந்தேகம்’ என சொல்கின்றனர். ‘ஒருவேளை சோனியாவின் கட்டளைக்கு இணங்கி பிரசாரத்திற்கு வந்தாலும், அது வேண்டா வெறுப்பாகத் தான் இருக்கும். அதுவும், ஒன்று அல்லது இரண்டு கூட்டங்களுக்கு மேல் ராகுல் வர மாட்டார்’ என்றும் சொல்லப்படுகிறது.

கேரளாவில் காங்., ஆட்சியை பிடிக்க வேண்டும் என விரும்புகிறார் ராகுல். ஆனால், இப்போதுள்ள நிலையில் அது சாத்தியப்படுமா என்பது அவருக்கே சந்தேகமாக இருக்கிறதாம். ‘விஜயுடன் தமிழகத்தில் கூட்டணி அமைந்தால், அவரை கேரளா பிரசாரத்திற்கும் பயன்படுத்தலாம்’ என எண்ணியிருந்தார் ராகுல். தற்போது, மீண்டும் இடதுசாரிகளே கேரளாவில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாம்.

Source link