ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள உயர் நீதிமன்றம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த நான்கு வாகனங்கள் தீ பற்றி எரிந்து சாம்பலாகின. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறு இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று ஆராய்ந்த போது அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்த வீடியோ காவல்துறையினரை மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, ஒரு பெண் பெட்ரோல் நிரப்பி வைத்திருந்த பாட்டிலில் தீயைப் பற்றவைத்து நீதிமன்ற வளாகத்தினுள் வீசியுள்ளார். இந்த தீ பற்றிய பாட்டில் நீதிமன்ற சுற்றுச்சுவர் மீது பட்டு கீழே விழுந்தது. அதில் ஏற்பட்ட தீயினால், அருகில் அருகில் இருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிந்தது. இதில், ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகி சாம்பலாகின. இது சம்பந்தமாக வெளியான வீடியோவில், சம்பந்தப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இது குறித்த நடத்தப்பட்ட விசாரணையில், பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்கவே இவ்வாறான செயலில் ஈடுபட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பழைய துணிகளில் பெட்ரோல் ஊற்றிப் பற்றவைத்த போது எதிர்பாராத விதமாக, அருகில் இருந்த வாகனங்கள் மீது தீ பற்றியது என அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
அதே நேரத்தில், சம்பவ இடத்திற்குத் தனது மகனுடன் ஆட்டோவில் வந்திறங்கிய அந்த பெண், ஐஸ்கிரீம் கடையின் அருகில் நின்றிருந்த ஒருவரிடம் தான் செய்வதைப் படம் பிடிக்கும்படி கூறியுள்ளார். பின்பு, இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், தான் தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாகவும் ஆனால், பெட்ரோல் தீர்ந்துவிட்டதாகவும் அப்பெண் விசாரணையில் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இதில் உண்மையான காரணம் என்ன என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதனால், இந்த சம்பவம் குறித்த குழப்பம் மக்களிடம் மட்டுமல்லாமல் காவல்துறையினரிடமும் நீடிக்கிறது. இருப்பினும், ஜகத்பூரை சேர்ந்த அப்பெண்ணைக் கைது செய்த காவல்துறையினர், இது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
