வாஷிங்டன் டி.சி.: பிரதமர் நரேந்திர மோடி உடனான அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தொலைபேசி உரையாடல் பயனுள்ளதாக இருந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் கடந்த செவ்வாய் கிழமை தொலைபேசியில் உரையாடினார். அப்போது, மேற்காசியாவில் நிகழும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இரு தலைவர்களுக்கு இடையேயான இந்த உரையாடலில், கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க்கும் இணைந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. எனினும், எலான் மஸ்க் என்ன பேசினார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இரு நாட்டு தலைவர்கள் இடையேயான தொலைபேசி உரையாடலில் அரசாங்க தொடர்பு இல்லாத ஒரு தனி நபர் இணைவது பேசுபொருளானது. இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், ‘‘அதிபர் ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடியுடன் ஒரு சிறந்த உறவு உள்ளது. மேலும், இது ஒரு பயனுள்ள உரையாடலாக இருந்தது’’ என்று தெரிவித்தார்.
