சென்னை,
பிரதமர் நரேந்திரமோடி நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும் (சனிக்கிழமை) சென்னையில் சுற்றுப்பயணம் செய்கிறார். நாளை புதுச்சேரிக்கு சென்றும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவர் நாளை பிற்பகல் 3.20 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்தடைகிறார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். அங்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார். அன்று மாலை 6 மணியளவில் அவர் மீண்டும் சென்னை வருகிறார். இரவு சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
இரவில் அவர் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசனை நடத்துகிறார். சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சென்னையில் இருந்து கேரளாவுக்கு செல்கிறார். பிரதமரின் சென்னை வருகையையொட்டி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பிரதமர் செல்லும் வழித்தடங்களில் 10 அடிக்கு ஒரு போலீசார் வீதம் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். இதையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகளில் டிரோன்கள் பறக்கவிடுவதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
