பிரத்யேக பண்டு திட்டங்கள் தளர்வுகளை அறிவித்தது செபி

ஓ ய்வுகால மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக மியூச்சுவல் பண்டு திட்டங்கள் நிறுத்தப்படும் என்ற செபியின் அறிவிப்பை மறுபரிசீலனை செய்யும்படி ‘ஆம்பி’ கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட செபி, தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.

மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், ‘சொல்யூஷன் ஓரியன்டடு பண்ட்ஸ்’ திட்டங்களையும் தொடரலாம் என செபி தெரிவித்துள்ளது. ஆனால் புதிய ‘லைப் சைக்கிள் பண்டு’ திட்டங்களை அறிமுகம் செய்யும்போது, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

செபியின் நிபந்தனைகள்

 ஒரு நிறுவனம் பழைய ‘சில்ட்ரன்ஸ் பண்டை’ தொடர்ந்தால், அவர்களால் 20 ஆண்டு ‘லைப் சைக்கிள் பண்டை’ துவக்க முடியாது

 பழைய ‘ரிடையர்மென்ட் பண்டை’ தொடர்ந்தால், 30 ஆண்டு ‘லைப் சைக்கிள் பண்டை’ துவக்க முடியாது

 இரண்டையுமே தொடர விரும்பினால், அவர்களால் 20 மற்றும் 30 ஆண்டு திட்டங்களை துவங்க முடியாது. மற்ற 5, 10, 15 மற்றும் 25 ஆண்டு திட்டங்களை மட்டுமே நடத்த முடியும்

 சில்ட்ரன்ஸ், ரிடையர்மென்ட் பண்டுகளை நிறுத்தினால் மட்டுமே, ஆறு வகையான (5, 10,15,20,25 மற்றும் 30 வருடம்) லைப் சைக்கிள் பண்டுகளையும் நடத்த முடியும்.

லைப் சைக்கிள் பண்டு எப்படி செயல்படும்? வயது ஏற ஏற, ரிஸ்க் குறையும். இதுதான் லைப் சைக்கிள் பண்டுகளின் சூத்திரம். உதாரணத்துக்கு, உங்களுக்கு வயது குறைவாக இருக்கும்போது அல்லது, இலக்கு நீண்ட துாரத்தில் இருக்கும்போது, நீங்கள் செய்யும் முதலீட்டு தொகையில், அதிகளவு பங்குகளில் முதலீடு செய்யப்படும். ஆனால், உங்கள் இலக்கு நெருங்க நெருங்க (உதாரணமாக ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே இருக்கும்போது), செய்யப்படும் முதலீடு, தானாகவே பங்குகளில் இருந்து விலகி, பாதுகாப்பான கடன் பத்திரங்களுக்கு மாறும்.

Source link