பாரிஸ்: ஐரோப்பிய நாடான பிரான்சின், கிரீஞி நகராட்சியின் துணை மேயராக இரண்டாவது முறையாக புதுச்சேரியை பூர்விகமாக கொண்ட இளைஞர் கணேஷ் ஜியராம் வெற்றி பெற்றுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதி க்ரீஞி. நகராட்சியான இங்கு கடந்த மார்சில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பிரெஞ்சு கம்யூ., கட்சி பெரும்பாலான உறுப்பினர் பதவியை கைப்பற்றியது.
இதில் வெற்றி பெற்ற பிலிப்பி ரியோ, மேயராக தெர்வு செய்யப்பட்டார். துணை மேயராக புதுச்சேரியை பூர்விகமாக கொண்ட கணேஷ் ஜியராம் இரண்டாவது முறையாக தேர்வாகி உள்ளார்.
புதிய நகராட்சி நிர்வாகத்தில் நகரமைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் சேவை ஆகிய துறைகளுக்கு பொறுப்பேற்றுள்ளார். இவரது தாத்தா அய்யாசாமி செல்லப்பன் புதுச்சேரியில் பிறந்தவர். பின், பிரான்ஸ் ராணுவத்தில் சேர்ந்து அங்கு இடம்பெயர்ந்தார்.
தேர்தல் வெற்றி குறித்து, கணேஷ் ஜியராம் கூறுகையில், ” கிரீஞி நகர மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இந்த நகரில் பிறந்து வளர்ந்த ஒருவராக, மக்களுக்கு சேவை செய்வது எனக்கு பெருமையளிக்கிறது. நகரின் வளர்ச்சிக்கு முழு உழைப்பையும் செலுத்துவேன்,” என்றார்.
