டெல் அவிவ்: ஈரான் புதிய ஆட்சியாளர் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது. அதேநேரத்தில் அவரின் பெயரை ஈரான் வெளியிடவில்லை. ஆனால், ஈரானின் புதிய ஆட்சியாளர் மற்றும் அவரை தேர்வு செய்யும் அனைவரையும் விட மாட்டோம் என இஸ்ரேல் கூறியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஈரானின் ஆட்சியாளரும் மத குருவுமான கமேனி கொல்லப்பட்டார். இதனையடுத்து அடுத்த ஆட்சியாளராக அவரது மகன் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அடுத்த ஆட்சியாளராக யார் வந்தாலும் அவர்களை கொல்வோம் என இஸ்ரேல் எச்சரித்து இருந்தது.
ஆனால், புதிய ஆட்சியாளர் குறித்து தேர்வான தகவலை ஈரான் அரசு மறுத்து இருந்தது.
இந்நிலையில், ஈரான் புதிய ஆட்சியாளரை் தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று நடந்தது. அதில் புதிய ஆட்சியாளர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஆனால், அவர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அது குறித்து அக்குழுவின் உறுப்பினர் மிரபாகுயேரி கூறுகையில், கமேனிக்கு பிறகு அடுத்து யார் என்பதில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சில தடைகள் உள்ளது. அது தீர்க்கப்பட வேண்டும் என்பதால், அதிகார மாற்றம் இன்னும் முழுமை பெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில் இஸ்ரேல் விமானப்படை கூறியுள்ளதாவது: ஈரானின் புதிய ஆட்சியாளர் மற்றும் அவரை தேர்வு செய்யும் ஒருவரையும் இஸ்ரேல் விடாது. அடுத்த ஆட்சியாளரை தேர்வு செய்யும் கூட்டத்தில் பங்கேற்கும் மற்றும் ஆர்வமுள்ள அனைவரையும் குறிவைப்போம். இது எச்சரிக்கை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
