புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணியில் ல.ஜ.க., வை சேர்க்க என்.ஆர்.காங்., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், புதுச்சேரியில் பா.ஜ., -என்.ஆர்.காங்., கூட்டணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி அமைத்து, கடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்தன. கடந்த முறை போட்டியிட்டதை போன்று என்.ஆர்.காங்.,16 தொகுதிகளிலும், பா.ஜ., 14 தொகுதிகளில் போட்டியிட வாய்மொழியாக முடிவான போதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சியை (ல.ஜ.க.,) சேர்த்து, 2 தொகுதிகளை ஒதுக்க பா.ஜ., விரும்புகிறது. ஆனால், கூட்ட ணியில் ல.ஜ.க.,வை சேர்க்க என்.ஆர்.காங்., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், கூட்டணிக்கு முன்பாக, புதுச்சேரி மாநில அந்தஸ்து தொடர்பாக உறுதிமொழியை தர வேண்டும் என்றும் முதல்வர் ரங்கசாமி பா.ஜ., வுக்கு கண்டிஷன் போட்டியிருந்தார். ரங்கசாமியின் நிபந்தனையை பா.ஜ., மேலிடத்திற்கு மத்திய அமைச்சர் மண்சுக் மண்டவியா கொண்டு சென்ற நிலையில், பா.ஜ., மேலிடம் மவுனம் சாதித்து வந்தது.
இதற்கிடையில் ஏனாம் சென்றிருந்த முதல்வர் ரங்கசாமி நேற்றிரவு 9:௦௦ மணிக்கு புதுச்சேரி திரும்பினார். அதேவேகத்தில் புதுச்சேரி அரசியல் நிலவரம், கூட்டணி நிலவரம் தொடர்பாக திடீரென என்.ஆர்.காங்., எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டோம் இன்னும் தரவில்லை. கூட்டணியில் ல.ஜ.க. வை சேர்க்க கூடாது என்று சொல்கிறோம், ஆனாலும் கேட்கவில்லை என, பா.ஜ.,விடம் தான் போட்ட நிபந்தனைகளை நிர்வாகிகளிடம் பட்டியலிட்டு புலம்பியுள்ளார். அப்போது, இனியும் கூட்டணியில் என்.ஆர்.காங்., தொடர வேண்டுமா என்று கேட்டுள்ளார். ரங்கசாமியின் ஆதங்கத்தை, என்.ஆர்.காங்., எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.
என்.ஆர்.காங்., முடிவை, பா.ஜ.,விடம் தெரிவிக்க, அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், என்.ஆர்.காங்., பொதுச்செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் நேற்று இரவு 10:௦௦ மணியளவில் ஓட்டல் அக்கார்டில் தங்கியிருந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ல.ஜ.க.,வை, கூட்டணியில் சேர்க்க கூடாது. அப்படி கூட்டணியில் சேர்த்தால் என்.ஆர்.காங்., வெளியேறும். இது தான் எங்கள் கட்சியின் முடிவு என்று அழுத்தமாக தெரிவித்துவிட்டு வௌியேறினர். இதனால் புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., -என்.ஆர்.காங்., தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் மத்திய அமைச்சர் மண்சுக் மாண்டவியா அவசர அவசரமாக ஆலோசனை நடத்தினார்.
காரணம் என்ன
முதல்வர் ரங்கசாமி, என்.ஆர்.காங்., கட்சியை ஆரம்பத்தில் கடுமையாக விமர்சித்து வந்த ல.ஜ.க., திடீரென பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்தது, என்.ஆர்.காங்., கட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. புதுச்சேரியில் தேசிய ஜன நாய கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு தலைவர். என்னிடமே கலந்து ஆலோசிக்காமல் ல.ஜ.க.,வை கூட்டணியில் சேர்த் தது ஏன் என்று முதல்வர் ரங்கசாமியும் கேள்வியை எழுப்பி அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார்.
ஆனாலும் ல.ஜ.க., வை சேர்ப்பதில் பா.ஜ., உறுதியாக உள்ளதாக தெரிகிறது. எங்களால் தான் ஆட்சி நடத்தினீர்கள். நலத்திட்டங்களை வாரி கொடுத்தீர்கள். விருப்பம் இருந்தால் கூட்டணி பற்றி பேசுவோம் என்று தடாலடியாக பா.ஜ., தெரிவித்து இருந்தது. அதனையடுத்து தான் என்.ஆர்.காங்., அவசர அவசரமாக இப்போது ஆலோசனை நடத்தி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும். ல.ஜ.க.,வை கூட்டணி யில் சேர்க்க கூடாது.
இல்லையெனில், கூட்டணியை முறித்து கொண்டு களத்தில் எதிரியாக சந்திப்போம் என்று என்.ஆர்.காங்., கட்சியும் பதிலடி கொடுத்துள்ளது. ஒரிரு தினங்கள் பா.ஜ., வின் மேலிட முடிவிற்கு காத்திருக்க முடிவு செய்துள்ளது. சாதகமாக பதில் வரவில்லையென்றால் தனியாக நிற்கவும், அனைத்து தொகுதிக்கும் 23ம் தேதி மனு தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
