நமது நிருபர்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவரை எதிர்த்து முன்னாள் முதல்வர் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பொதுவாக அரசியல் அரங்கில் ஒரு மரபு உண்டு. ஆளும் முதல்வரை நேரடியாக எதிர்த்து, தங்களது முதல்வர் வேட்பாளரையே களமிறக்குவது என்பது பெரும்பாலும் தவிர்க்கப்படும். அந்த ரிஸ்க்கினை அரசியல் கட்சியினர் எடுக்கவே மாட்டார்கள்.
முதல்வர் வேட்பாளர் தோல்வியடைந்தால், அது கட்சியின் கண்ணியத்திற்கும், எதிர்கால அரசியல் நிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பல கட்சிகள் முதல்வர் வேட்பாளரை மட்டும் பாதுகாப்பான தொகுதியை தேர்ந்தெடுத்து, நிறுத்தும். ஆளும் கட்சியுடன் எதிர்கட்சி தலைவர்கள் இணக்கமாக இருந்தால் சில நேரங்களில் ‘டம்மி’ வேட்பாளரை தான் போடுவார்கள்.
ஆனால் இந்த முறை புதுச்சேரியில் களம் மாறியுள்ளது. அரசியல் கணக்குகளை உடைத்துக் கொண்டு, காங்கிரஸ் கட்சி நேரடி சவாலுடன் களமிறங்கியுள்ளது. தற்போதைய முதல்வர் ரங்கசாமி நிற்கும் தட்டாஞ்சாவடி தொகுதியில் அவரை எதிர்த்து, முன்னாள் முதல்வரும் தற்போதைய மாநில காங்., தலைவருமான வைத்திலிங்கம் எம்.பி., யை நேரடியாக நிறுத்தியுள்ளது.
இரு முறை முதல்வராகவும், ஏழு முறை எம்.எல்.ஏ.வாகவும், இரு முறை எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்திலிங்கம், மீண்டும் சட்டசபை களத்தில் குதித்திருப்பது புதுச்சேரி அரசியல் சூழலை சூடுபிடிக்கச் செய்துள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்., வென்றால் — அடுத்த முதல்வர் வைத்திலிங்கமே என்ற நம்பிக்கையில் காங்., கட்சியினர் உற்சாகக் குரலில் முழங்கி வருகின்றனர்.
ஏற்கனவே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் என இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
