புதுடில்லி:டில்லியின் பாவானா என்ற இடத்தில் போலீசார் நடத்திய ரகசிய சோதனையில், 75 சமையல் காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்றதாக, ஒருவரை கைது செய்துள்ளனர்.
மேற்காசிய போரால், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சமையல் காஸ் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் நபர்கள் அதிகரித்துள்ளனர். அவர்களை போலீசார் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாவானா என்ற இடத்தில் உள்ள தன் வீட்டில், 75 சமையல் காஸ் சிலிண்டர்களை மறைத்து வைத்து இருந்ததாக, போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மறைத்து வைத்திருந்த சமையல் காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றில் பெரும்பாலனவை வர்த்தக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர்கள். அவரை கைது செய்துள்ள போலீசார், அந்த சிலிண்டர்களை எப்படி கடத்தி வந்தார் என்பது குறித்து அவரிடம் விசாரிக்கின்றனர்.
