புதுடில்லி:தன் மீது தொடரப்பட்ட மோசடி வழக்கில், தனக்கு விதிக்கப்பட்டுள்ள மூன்றாண்டு சிறை தண்டனையை எதிர்த்து, மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜேந்திரபார்தி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
ஜில்லா ஷாகாரி கிரிஷி அவுர் கிராமின் விகாஸ் பாங்க் என்ற வங்கியின் அறங்காவலராக இருந்தார் ராஜேந்திரபார்தி. காங்கிரஸ் எம்.எல்.ஏ., அந்த வங்கியில், பத்து லட்சம் ரூபாயை ராஜேந்திரபார்தியின் தாய், சாவித்ரி என்பவர், பத்தாண்டுகளுக்கு டிபாசிட் செய்திருந்தார்.
அந்த வங்கியின் நடைமுறையில் இல்லாத படி, வங்கி அளித்திருந்த பத்திரத்தில் திருத்தம் செய்து, பத்தாண்டுகளுக்கு சாவித்ரி டிபாசிட் செய்திருந்ததை, 15 ஆண்டுகளாக மாற்றி, வட்டியை அவர் பெயருக்கு மாற்றிக் கொண்டார் என ராஜேந்திரபார்தி மீது வங்கியின் மேலாளர் புகார் கூறியிருந்தார்.
அந்த புகாரை விசாரித்த டில்லி விசாரணை நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 1ம் தேதி அவரை குற்றவாளி என அறிவித்து, 2ம் தேதி அவருக்கும், சேர்ந்து சதி ஆலோசனையில் ஈடுபட்டதாக இருவருக்கும், மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
மேலும், அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த தொகையை அவர், போபால் நகரில் உள்ள, மத்திய பிரதேச ஷகாரி கிரிஷி அவுர் கிராமின் விகாஸ் வங்கி சிமீத்துக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, அந்த வழக்கில், 60 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என உத்தரவிடப்பட்டிருந்தததால், ராஜேந்திரபார்தி மேல் முறையீடு செய்தார்.
டில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு, நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை, வரும், 15ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, இது குறித்து பதிலளிக்குமாறு, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மேல் முறையீடு மனு தாக்கல் செய்ய வசதியாக, அவருக்கு சிறை தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. மேல் முறையீடு மனு முடிவின் அடிப்படையில் தான் அவர் சிறையில் அடைக்கப்படுவார்.
