புதுடில்லி: ஆ ம் ஆத்மி கட்சியின் அருண் ஜெட்லி என, இவரைச் சொல்லலாம். அந்த அளவிற்கு, மீடியாவில் திறமையாக, அதே சமயம் கவனமாக பேசக் கூடியவர். பார்லிமென்டிலும் நடுத்தர மக்களின் பிரச்னைகளை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் அருமையாக பேசக்கூடியவர்.
சமூக வலைதளங்களில் பிரபலமானவர். இவரை, ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில் 123 லட்சம் பேரும், ‘எக்ஸ்’ வலைதளத்தில் 10 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர். அவர் தான் ராகவ் சத்தா. ராஜ்ய சபாவில், ஆம் ஆத்மி கட்சியின் துணை தலைவராக இருந்தார்; ஆனால், திடீரென இவர் பதவியிலிருந்து துாக்கி அடிக்கப்பட்டார்.
எதற்காக இவரை பதவியிலிருந்து, அரவிந்த் கெஜ்ரிவால் நீக்கினார் என்பதற்கு, அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆனால், ‘இவர் பா.ஜ., பக்கம் சென்று விடுவாரோ என்று கெஜ்ரிவால் சந்தேகப்பட்டார்’ என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.
ராஜ்யசபாவில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது, எந்தவித விமர்சனமும் ராகவ் செய்ததில்லை; பா .ஜ., குறித்தும் அதிகம் விமர்சிக்கவில்லை. அத்துடன், மதுபான வழக்கில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட போது, கண் அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுவிட்டார் ராகவ்.
இந்த வழக்கில் கெஜ்ரிவாலும், மணிஷ் சிசோடியாவும் கீழ் கோர்ட்டின் உத்தரவில் விடுதலையான போது, டில்லியின் ஜந்தர் மந்திரில் பெரும் வாழ்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றது; அதிலும் ராகவ் பங்கேற்கவில்லை.
‘பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரி – -மார்ச்சில் பஞ்சாப் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வேளை, ராகவ், பா.ஜ., பக்கம் போகிறாரா என்று கெஜ்ரிவாலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
‘பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளர் ராகவ் சத்தா என, பா.ஜ., அறிவிக்கலாம் என்றும், கட்சியில் பேச்சு உலவுகிறது. இதனால் தான், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்து ராகவ் விலக்கப்பட்டார்’ என்கின்றனர் கட்சியினர்.
இன்னொரு விஷயமும் கட்சி தொண்டர்களிடையே பேசப்படுகிறது. பஞ்சாப் விவகாரத்தை கவனித்த ராகவ், நிறைய பணம் சுருட்டி விட்டார்; இதனால், அவரை கெஜ்ரிவாலின் ஆட்கள் தாக்கியதால் தான் அவர் கண் பாதிக்கப்பட்டதாம். எது எப்படியோ, ஆம் ஆத்மி கட்சியிலும் பிரச்னைகளுக்கு குறைவில்லை.
