புதுடில்லி: இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி இலவசமாக போடும் திட்டத்தை நாடு முழுவதும் விரைவில் துவக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பெண்கள் மத்தியில் தடுக்கக்கூடிய புற்றுநோய்களை ஒழிக்கும் நோக்கில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு நாடு முழுவதும் ஹியூமன் பேப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி திட்டம் விரைவில் துவங்கப்படும். இதற்காக ஒரு முறை போடப்படும் கார்டசில் என்ற தடுப்பூசி போடப்படும்.
இந்த திட்டமானது சிறப்பு தடுப்பூசி இயக்கமாக செயல்படுத்தப்படும். வழக்கமான தடுப்பூசி திட்டங்களின் கீழ் வராது. குறிப்பிட்ட வயது பெண்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தும்போது, அவர்களுக்கு புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என்று உலகளாவிய மற்றும் இந்திய அளவிலான ஆராய்ச்சி முடிவுகள் உறுதி செய்துள்ளன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய அளவிலான இந்த தடுப்பூசி திட்டமானது 14 வயது சிறுமிகளை மையமாக வைத்து செயல்படுத்தப்பட உள்ளது. இந்த வயதில் தடுப்பூசி செலுத்தப்படும்போது அவர்களுக்கு நோய் பாதிப்பு துவங்குவதற்கு முன்னரே உரிய பாதுகாப்பு கிடைக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
வெளிச்சந்தையில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான இரண்டு டோஸ் போடப்படும் கார்டசில்-4 தடுப்பூசியின் விலை ரூ.3,925 ஆகும். 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை 3 டோஸ் போடப்பட வேண்டும். இந்த தடுப்பூசியை எம்எஸ்டி இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது குறிப்பிடத்தக்கது.
ஹியூமன் பேப்பிலோமா வைரஸ் தொற்று கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு காரணம். இதில் 14 வகைகள் புற்றுநோயை ஏற்படுத்தும் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் எச்பிவி 16, எச்பிவி 18 ஆகியன 71 சதவீத பாதிப்புக்கு காரணம்.9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு ஒரு டோஸ போட சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 2024ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்தடுப்பூசியை மகளிர் குடும்பநலத்துறை சார்பில் 9 -14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
