புதுடில்லி: இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் முழு அளவில் செயல்படுகின்றன. கடந்த சில நாட்களில் காஸ் உற்பத்தி 10 சதவீதம் அதிகரித்து உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் பாதிப்பு பல்வேறு நாடுகளில் தென்படுகிறது. காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பதுக்கலை தடுக்க மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாக ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: காஸ் சிலிண்டர் சப்ளை தொடர்பாக, உணவக சங்கங்களுடன் விரைவில் எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசனை நடத்தி அவர்களின் பிரச்னைகளை தெரிந்து கொள்ளும்.
அவர்களின் பிரச்னைகளை கேட்க ஐஓசி, எச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல் நிர்வாக இயக்குநர்கள் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. வணிக ரீதியிலான காஸ் சிலிண்டர் குறித்த அவர்களின் உண்மையான பிரச்னைகள் சரி செய்து கொடுக்கப்படும். 3 பேர் குழு தேவைக்கு ஏற்ப விநியோகத்தை சீரமைக்கும்.
கடந்த சில நாட்களில் காஸ் உற்பத்தி 10 சதவீதம் அதிகரித்துள்ளது. எல்பிஜி மற்றும் எல்என்ஜி ஆகியவை பல்வேறு நாடுகளில் இருந்து வருகின்றன. விரைவில் புதிய நாடுகளில் இருந்தும் வரும்.
முன்பு பிரச்னை இருந்தது. ஆனால், இன்று பெட்ரோலிய பொருட்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலுக்கு முன்பே இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழு அளவில் செயல்பட்டு வருகின்றன. ஹோர்முஸ் நீரிணைக்கு வெளியே இருந்து 70 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த இடையூறுகளை சமாளிக்க ஏற்கனவே தயாராகிவிட்டோம். இந்த பிரச்னை முடிந்ததும், மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா சிறப்பாக மீண்டு வரும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
