புதுடில்லி: உலக அரங்குகளில் தமிழின் மகத்துவத்தை அதன் தொன்மையை பிரதமர் மோடி தொடர்ந்து எடுத்துரைத்து தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறார் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் பதிப்பக பிரிவு அச்சிட்ட தமிழ் கலாசாரம், பாரம்பரியம், கட்டடக்கலை, இலக்கியம், கலாசாரம் மற்றும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி தொடர்பான 13 புத்தகங்களை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.ராமேஸ்வரம் மற்றும் ராமானுஜன் முதல் பண்டைய துறைமுக நகரமான அரிக்கமேடு வரையிலும், பக்தி இலக்கியம் மற்றும் சங்க கால இசைக்கருவிகள் முதல் மீனாட்சி அம்மன் கோயில், பிரகதீஸ்வரர் கோவில் போன்ற கட்டட கலை வரையிலான பரந்த நாகரிகத்தை இந்த புத்தகங்கள் உள்ளடக்கி உள்ளன.
இந்த விழாவில் பேசிய துணை ஜனாதிபதி, தமிழின் பாரம்பரியத்தையும் அறிவியல் சிந்தனையையும் கலை மரபையும் சமுதாய பார்வையையும் வெளிப்படுத்தும் நூல்களாக இவை அமைந்துள்ளன. பாரதம் பல மொழிகள் கொண்ட நாடாக இருந்தாலும் அதன் ஆன்மா ஒன்றுதான். வசுதைவ குடும்பகம் மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற தத்துவங்கள் நாட்டை இணைக்கும் நாகரிக நெறிமுறைகளை பிரதிபலிக்கின்றன. இவை பாரதம் முழுவதும் காணப்படும் ஒற்றை தர்மத்தின் வெளிப்பாடுகள். உலக அரங்குகளில் தமிழின் மகத்துவத்தை அதன் தொன்மையை பிரதமர் மோடி தொடர்ந்து எடுத்துரைத்து தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
