புதுடில்லி : ஒடிஷாவை சேர்ந்த தொழிலாளியை சிறார்கள் கத்தியால் தாக்கிய சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளளது.
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயிலில் சென்ற, ஒடிஷாவை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளி சுராஜ் என்பவரை, 17 வயதே ஆன நான்கு சிறார்கள் கடந்த ஆண்டு டிச., 28ல் சரமாரியாக கத்தியால் தாக்கினர். அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றினர்.
படுகாயம் அடைந்த சுராஜை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து சென்னை ராஜிவ்காந்தி பொது மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திடீரென தொழிலாளி மாயமானார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருத்தணி போலீசார், 17 வயதுள்ள நான்கு சிறுவர்களை கைது செய்தனர்.
சிறார் நீதி ஆணையத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூன்று சிறார்கள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். ஒரு சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். இந்நிலையில், ஒடிஷா மாநில தொழிலாளியை கொடூரமாக தாக்கிய சம்பவம் குறித்து, டில்லியில் உள்ள தேசிய மனித உரிமை கமிஷனுக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த மனித உரிமை கமிஷன் , தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என குற்றஞ்சாட்டியது. மேலும் பாதிக்கப்பட்ட சுராஜூக்கு போதுமான பாதுகாப்பு அளிக்காமல் அலட்சியாக செயல்பட்டதாகவும் தெரிவித்தது.
இது குறித்து விளக்கம் கேட்டு, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மனித உரிமை கமிஷன், மாயமான சுராஜை விரைவில் கண்டுபிடித்து தேவையான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய மாநில போலீசுக்கு உத்தர விட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபருக்கு நிவாரணமாக 2 லட்சம் ரூபாயை வழங்க, ஏன் மனித உரிமை கமிஷன் பரிந்துரைக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
