புதுடில்லி: கச்சா எண்ணெய் வினியோக தடையால், சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் நெருக்கடியை சமாளிக்க, வீட்டிலிருந்து பணியாற்றுவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை சர்வதேச எரிசக்தி முகமை பரிந்துரைத்து உள்ளது.
அவ்வமைப்பின் அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலால், எரிபொருட்கள் வரத்து உலகம் முழுதும் பாதித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல் போக்குவரத்து தடைபட்டு உள்ளது.
வழக்கமாக, 1.50 கோடி பீப்பாய் அளவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் 50 லட்சம் பீப்பாய் அளவுக்கு மற்ற பொருட்கள் இவ்வழியாக பயணிக்கின்றன. ஒட்டுமொத்த உலகின் எண்ணெய் பயன்பாட்டில், இது 20 சதவீதம். தற்போதைய நெருக்கடியால், சர்வதேச எண்ணெய் சந்தை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை, பீப்பாய்க்கு 100 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால், டீசல், விமான எரிபொருள், சமையல் எரிவாயு ஆகிய சுத்திகரிப்பு பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலை சமாளிக்க அரசு, தொழில் நிறுவனங்கள், குடும்பங்கள் ஆகியவை எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
![]() |
வீட்டிலிருந்தபடி பணியாற்றுதல், நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டும்போது குறைந்தபட்ச வேகத்தை மணிக்கு 10 கி.மீ.,குறைத்தல், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துதல், ஒரு காரில் பலர் பயணம் செய்வது, பெரு நகரங்களில் குறைவான அளவே தனியார் போக்குவரத்தை பயன்படுத்துவது, விமான பயணங்களைக் குறைப்பது நல்லது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

