புதுடில்லி: கடந்த 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை ஒப்பிடும் போது, 17 நாட்கள் கழித்து 2026ம் ஆண்டுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதிகளை அதிகாரப்பூர்வமாக தலைமை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்தது. இம்முறையும் தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தான் ஓட்டுப்பதிவு ஏப். 23ம் தேதி நடக்கும் என்று அறிவித்துள்ளது. அதே நேரம் ஒட்டு எண்ணிக்கை ஒரே நாளில் அதாவது மே 4ம் தேதி நடக்கும் என்றும் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
தற்போது அறிவித்துள்ள தேர்தல் தேதிகள், கடந்த முறையான 2021ம் ஆண்டு ஓட்டுப்பதிவுடன் ஒப்பிட்டு பார்த்தால் பல்வேறு அம்சங்களை கொண்டு உள்ளது. முந்தைய தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த தேர்தல் 17 நாட்கள் தள்ளி நடத்தப்படுகிறது. எனினும், 2001, 2006, 2016 தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த முறை அசாமில் 3 கட்டங்களாக நடந்த தேர்தல், இம்முறை ஒரே கட்டமாக நடக்கிறது. அதே போல 8 கட்டங்களாக நடத்தப்பட்ட மேற்கு வங்க தேர்தல் இம்முறை 2 கட்டங்களாக மட்டுமே நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் 2001ல் மே 10 (வியாழன்), 2006ல் மே 8 (திங்கள்), 2011ல் ஏப்.13 (புதன்), 2016ல் மே 16 (திங்கள்) ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 2021 சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப் 6ம் தேதி (செவ்வாய்) நடைபெற்றது. வரவிருக்கும் 2026 தேர்தல் ஓட்டுப்பதிவு வியாழக்கிழமை நடக்கிறது.
