புதுடில்லி: குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு வைத்துள்ளவர்கள், சமையல் காஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கவோ அல்லது புதிதாக இணைப்பை பெறவோ மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மேற்காசிய போர் காரணமாக சர்வதேச அளவில் எரிசக்தி வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தின்படி, குழாய் வழி இணைப்பு உள்ளவர்கள் தங்களது சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
குழாய் வழி இணைப்பு பெற்றவர்களுக்கு, அரசு எண்ணெய் நிறுவனங்கள் அல்லது வினியோகஸ்தர்கள், புதிதாக எல்.பி.ஜி., இணைப்பை வழங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள இணைப்பின் அடிப்படையில் ‘ரீபிள்’ செய்யவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. குழாய் வழி எரிவாயு வசதி இல்லாத வீடுகளுக்கு, காஸ் சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
