புதுடில்லி: ''சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதில் சமரசம் இல்லாமல் செயல் பட்டவர்; பெண் சக்தியின் வெளிப்பாடாக

புதுடில்லி: ”சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதில் சமரசம் இல்லாமல் செயல் பட்டவர்; பெண் சக்தியின் வெளிப்பாடாக திகழ்ந்தவர்,” என, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.

பெண் சக்தி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில், ‘மன் கீ பாத்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக, நாட்டு மக்களிடம் வானொலியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அதன்படி, நேற்று உரையாற்றிய மோடி, நாளை ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுவதையொட்டி, அவரை புகழ்ந்து பேசினார்; ஜெயலலிதாவை, ‘அம்மா’ என்றும் மோடி குறிப்பிட்டார்.

மோடி பேசியதாவது: இந்தியாவில் சமூக நலனுக்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்டவர்கள், எப்போதுமே மக்களின் இதயங்களில் நிலைத்து இருப்பர். அவர்களில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ஒருவர். பெண்களுக்கான நலத்திட்டங்களை வழங்கியதோடு, சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதில் சமரசமின்றி கடும் நடவடிக்கைகளை எடுத்தவர்.

பெண் சக்தியின் வெளிப்பாடாகவே ஜெயலலிதா திகழ்ந்தார்; தமிழக மக்கள் இதயங்களில் எப்போதும் வாழ்கிறார். தேசபக்தி நான் தமிழகம் வரும்போதெல்லாம், தமிழக மக்கள் இன்னமும் அவர் மீது வைத்திருக்கும் ஆழ்ந்த பாசத்தை உணர்கிறேன். அவருடனான என் நினைவுகள், பசுமரத்தாணி போல் என் நெஞ்சில் பதிந்துள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன், ஒரு பொங்கல் திருநாளில், சென்னைக்கு என்னை அழைத்து விருந்தளித்தார். கடந்த 2002 மற்றும் 2012ம் ஆண்டுகளில், குஜராத் முதல்வராக நான் பதவியேற்ற தருணங்களில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, என் பதவியேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அவருக்குள் மிக ஆழமான தேசபக்தி இருந்தது; இந்திய கலாசாரம், பாரம்பரியத்தில் பெருமிதம் கொண்டவர். தமிழக முதல்வராக, குஜராத்துக்கு தேவையான உதவிகளையும் செய்தார். அவர், மக்கள் போற்றும் மகத்தான தலைவர்; மிகவும் தெளிவான சிந்தனைகளை கொண்டவர்.

இரு மாநில முதல்வர்களாக இருவரும் ஆட்சி நிர்வாகம் குறித்து அவ்வப்போது ஆலோசித்து இருக்கிறோம். ஜெயலலிதாவின் சேவைகள் என்றென்றும் நினைவில் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Source link