புதுடில்லி: டில்லியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த, 380க்கும் மேற்பட்ட பேனர்களை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
டில்லியில் வரும், 16ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை, செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நடக்கிறது. 100 நாடுகளின் அமைச்சர்கள், 15 முதல், 20 அரசுகளின் தலைவர்கள் உட்பட, 35,000 பேர் வரை மாநாட்டில் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத பேனர்கள், விளம்பர பலகைகளை அகற்றும் பணியில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுட்டனர்.
ஜனவரி 1ம் தேதி முதல் இம்மாதம் முற்பகுதி வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையில், சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த, 380 பேனர்கள், விளம்பர பலகைகள், கம்பங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் போன்றவை அகற்றப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை அரசியல் கட்சிகள் மற்றும் மத நிறுவனங்களால் வைக்கப்பட்டிருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. டில்லி கரோல் பாக் பகுதியில் அதிகபட்சமாக, 87 பேனர்கள் அகற்றப்பட்டன. அதையடுத்து, மத்திய மண்டலத்தில், 38 பேனர்கள் அகற்றப்பட்டன.
‘செயற்கை நுண்ணறிவு மாநாட்டை ஒட்டி, டில்லி மாநகரை அழகுபடுத்தும் விதமாகவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், மாநகராட்சி விதிகளை முறையாக அமல்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
