புதுடில்லி: டில்லியில், ஐ.எல்.பி.எஸ்., எனப்படும் கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் மையத்தில், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத படுக்கைகள் ஒதுக்கப்படுவதில்லை என தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவுக்கு பதில் அளிக்க, டில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் இயங்கும், ‘சமூக நீதி’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு: பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு அரசு மருத்துவமனையில் படுக்கை ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
விதிமுறைப்படி கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் மையத்தில் உள்நோயாளிகளுக்கு 10 சதவீத படுக்கைகள் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். அதேபோல, புறநோயாளிகளில் 25 சதவீதம் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு கட்டணம் இன்றி சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஹெபடைடிஸ், சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற கடுமையான கல்லீரல் நோய்களில் நிபுணத்துவம் பெற்ற, அரசு நிதியுதவி பெறும் சுகாதார நிறுவனமான ஐ.எல்.பி.எஸ்.,சில் இந்த விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. மாறாக, மாநகரிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவ நிறுவனமாக ஐ.எல்.பி.எஸ்., மாறி வருகிறது.
இது நியாயமற்றது. மேலும், அரசியலமைப்பின் 14 மற்றும் 21ம் பிரிவுகளை மீறும் செயல். ஏழைகள் குறைந்த கட்டணத்தில் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான அரசியலமைப்பு உரிமை ஐ.எல்.பி.எஸ்.,சில் மறுக்கப்படுகிறது.
விதிமுறைப்படி பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு உரிய சலுகையை வழங்க ஐ.எல்.பி.எஸ்., மற்றும் டில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சத்யகம் ஆஜரானார். சமூக நீதி தொண்டு நிறுவன கோரிக்கை குறித்து பதில் அளிக்க, டில்லி அரசு மற்றும் ஐ.எல்.பி.எஸ்., ஆகியவற்றுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 22ம் தேதி ஒத்திவைத்தனர்.
