புதுடில்லி: டில்லியில் நடந்து வரும் ஏஐ மாநாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஏஐ பயன்பாட்டுக்கான உறுதிமொழிகளை 2.5

புதுடில்லி: டில்லியில் நடந்து வரும் ஏஐ மாநாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஏஐ பயன்பாட்டுக்கான உறுதிமொழிகளை 2.5 லட்சம் மாணவர்கள் எடுத்தனர். இது கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

‘ஏஐ இம்பாக்ட் சம்மிட்’ எனப்படும் சர்வதேச ஏஐ மாநாடு முதல்முறையாக டில்லியில் நடந்து வருகிறது. கடந்த 16ம் தேதி தொடங்கிய இந்த மாநாடு பிப்ரவரி 21ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், பிரிட்டன்,தென்கொரியா உள்பட 20 நாடுகளின் தலைவர்களும், கூகுள், மைக்ரோசாப்ட், ஓபன் ஏஐ உள்பட மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகளும், அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாடு துவங்கிய முதல் நாளில் ஏஐ பயன்பாட்டுக்கான உறுதிமொழியை 2 லட்சத்து 50 ஆயிரத்து 946 மாணவர்கள் எடுத்துக் கொண்டனர். இது கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. பாரத் மண்டபத்தில் நடந்த இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனை நடுவரால் அங்கீகரிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான விருதை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெற்றுக் கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘ஏஐ தொழில்நுட்பத்தை இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்தச் சாதனையை அர்ப்பணிக்கிறோம். ஏஐ தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காகவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பயன்படுத்த வேண்டும் என்பதே இலக்கு.

ஏஐ பயன்பாட்டு உறுதிமொழி எடுத்த 2.5 லட்சம் மாணவர்களுக்கு எனது பாராட்டுக்கள். முதலில் 5,000 உறுதிமொழிகள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், அதிகளவிலான மக்கள் பங்கேற்று இந்த சாதனையை படைத்துள்ளனர்.

இது ஏஐ தொழில்நுட்பத்தை பொறுப்புடன் கையாள்வது குறித்த விழிப்புணர்வு இந்தியர்களிடம் இருப்பதைக் காட்டுகிறது. இது நாட்டிற்கு ஒரு பெருமையான நாள்,’ என்று அவர் கூறினார்.

Source link