புதுடில்லி: டில்லியில், 2020ல் நடத்தப்பட்ட கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷார்ஜீல் இமாமுக்கு, 10 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி, டில்லி கோர்ட் நேற்று உத்தரவிட்டது.
கடந்த, 2020ல், வடகிழக்கு டில்லி மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட கலவரத்தில், 53 பேர் கொல்லப்பட்டனர்; 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான ஷார்ஜீல் இமாம் என்பவர், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தன் சகோதரர் திருமணம் மற்றும் ரம்ஜான் பண்டிகையின் போது, வீட்டில் இருக்க வேண்டும் என்பதால், தன்னை ஜாமினில் விடுமாறு, அவர் டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சமீர் பாஜ்பாய், கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷார்ஜீல் இமாமுக்கு, 10 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இதற்காக, அவருக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குடும்ப உறவுகள் தவிர்த்து, பிறருடன் பேசக் கூடாது. சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது. 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மொபைல் போன் எண்ணை விசாரணை அதிகாரியிடம் கொடுக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
