புதுடில்லி: திமுகவும் காங்கிரஸும் தங்களுக்கு இடையிலான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு

புதுடில்லி: திமுகவும் காங்கிரஸும் தங்களுக்கு இடையிலான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு பல பரபரப்பு தகவல்கள் பரவியது. காங்கிரஸ் – தவெகவுடன் கூட்டணி இறுதியாக உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

தற்போது காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடனே விஜயைச் சந்தித்தேன் என ராகுல் நண்பரும், காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தி உண்மை நிலவரங்களை அம்பலப்படுத்தினார். இது குறித்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:

கேள்வி: காங்கிரஸ் தலைமையின் அனுமதியுடன்தான் நீங்கள் விஜயைச் சந்தித்தீர்களா?

பிரவீன் சக்கரவர்த்தி: இந்தச் சந்திப்புகளை நான் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளவில்லை. கடந்த ஆறு மாதங்களில் நான் செய்த அனைத்தும் செயல்களும், காங்கிரஸ் தலைமையின் சம்மதம் மற்றும் ஒப்புதல்பெற்ற பிறகே செய்தேன். கட்சியின் நலனுக்காக, விமர்சனங்களை எதிர்கொள்ளவும், பலிகடாவாக மாறவும் நான் தயாராகவே இருந்தேன்.

நான் செய்த அனைத்தும் என் கட்சியின் சிறந்த நலனுக்காகவே தான். தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்று என் கட்சியைச் சேர்ந்தவர்களே பலவிதமாகப் பேசியது எனக்குத் தெரியும். ஆனால், மற்றொரு மூத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியும், விஜயுடனான சந்திப்பில் கலந்துகொண்டார்.

கேள்வி: கூட்டணி அமைப்பது குறித்து ஏதேனும் முறையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றனவா?

பிரவீன் சக்கரவர்த்தி: அதற்கு நான் பதிலளிக்க மாட்டேன். ஆனால் நாங்கள் அரசியல் குறித்துப் பேசினோமா? நிச்சயமாகப் பேசினோம். நாங்கள் தமிழக அரசியல் குறித்துப் பேசினோமா? என்றால் அது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

கேள்வி: ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை கைவிட்டு, கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையை, திமுக தலைவர் ஸ்டாலின் எவ்வாறு சம்மதிக்க வைத்தார்?

பிரவீன் சக்கரவர்த்தி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அனுமனைப் போன்றது; அதற்குத் தன் சொந்த பலமே தெரியாது. இம்முறை கட்சியைப் புதுப்பிக்கவும், மீண்டும் கட்டமைக்கவும், பலப்படுத்தவும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக நாங்கள் கருதினோம்.

காங்கிரஸ் கட்சிக்கும், குறிப்பாக ராகுலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மக்களுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. அத்தகைய சூழல் நிலவும் ஒரு மாநிலத்தில், தன்னை வலுப்படுத்திக்கொள்ள ஒரு தேசியக் கட்சி ஏன் கடுமையாக உழைக்காது.

அப்படியிருக்கையில், ஒரு காங்கிரஸ் கட்சித் தொண்டரோ அல்லது தலைவரோ அமைச்சராகி, அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள ஏன் ஆசைப்பட மாட்டார்கள்? எங்கள் கோரிக்கையில் நியாயமற்றது என்று எதுவும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.

கேள்வி: ராகுல் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கூட்டிய கூட்டத்தில், தவெகவுடனான கூட்டணியை எத்தனை கட்சி நிர்வாகிகள் ஆதரித்தனர்?

பிரவீன் சக்கரவர்த்தி: அது தவெக அல்லது திமுக பற்றிய விவாதமாக இருந்ததென்று நான் கருதவில்லை. பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நிர்வாகிகள், எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்பதையே ஆதரித்தனர் என்று நான் சொல்வேன்.

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையைச் சிலர் ஆதரித்தனர். ஒரு சிலரோ, இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாவிட்டால், நாம் வேறு மாற்று வழிகளைப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினர்.

கேள்வி: களத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் எவ்வாறு இணக்கமாகச் செயல்படுவார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பிரவீன் சக்கரவர்த்தி: தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என காங்கிரஸ் தொண்டர்கள் உணர்கிறார்கள். தங்களுக்கு இடங்கள் கிடைக்காததால் கட்சித் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். நாம் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கேள்வி: திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

பிரவீன் சக்கரவர்த்தி: இது ஒரு கடுமையான போட்டி நிறைந்த தேர்தலாக இருக்கும். தவெக ஓட்டை பிரிக்கும். இது ஆளும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Source link