புதுடில்லி: தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, வெறும் விளம்பரங்களுக்காக நீதிமன்றங்களைப் பயன்படுத்தக் கூடாது

புதுடில்லி: தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, வெறும் விளம்பரங்களுக்காக நீதிமன்றங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்தாண்டு நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 242ல் தனித்து போட்டியிட்டது. இதில் ஒரு இடத்தில் அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. 238 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.

இதனால், அதிருப்தியில் இருந்த பிரசாந்த் கிஷோர், பீஹார் சட்டசபை தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், தேர்தல் அறிவிப்புக்கு சற்று நேரத்திற்கு முன்பு, பெண்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்று ஆளும் கட்சி அறிவிப்பை வெளியிட்டதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வெறும் விளம்பரங்களுக்காக நீதிமன்றங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று பிரசாந்த் கிஷோருக்கு நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது; உங்களின் அரசியல் கட்சி எத்தனை ஓட்டுகள் வாங்கியது? தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் உடனடியாக நீதிமன்றங்களுக்கு வரக்கூடாது. வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், மீண்டும் விளம்பரம் தேடுவதற்காக நீதித்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது.

தேர்தலுக்காக இலவசப் பொருட்கள் வழங்குவதை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். தேர்தலில் எல்லாவற்றையும் இழந்த கட்சி சார்பிலான இந்த வழக்கை விசாரிக்க நாங்கள் விரும்பவில்லை. இன்று வழக்கு போடும் இந்த அரசியல் கட்சி நாளை ஆட்சிக்கு வந்தால், அதுவும் இதே காரியத்தைச் செய்யும், இவ்வாறு கூறினர்.

Source link