புதுடில்லி: தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் விலகி கொள்வதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை நியமிக்க, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், அதே ஆண்டு மத்திய அரசு சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அதன்படி தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான குழுவில் பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிரதமர் நியமனம் செய்யும் மத்திய அமைச்சர் இடம்பெறுவார் என அதில் கூறப்பட்டது.
தேர்வு குழுவில் தலைமை நீதிபதி நீக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்ஷி மற்றும் விபுல் எம் பஞ்சோலி அமர்வு முன்பு இன்று மார்ச் 20ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், இந்த வழக்கை நான் விசாரிக்க வேண்டுமா? அதில் ஒரு முடிவை எடுக்கும் போது தனக்கு சுயநலன் இருக்கும் என சிலர் குற்றம்சாட்டுவார்கள் என தெரிவித்தார்.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறுகையில், அப்படி யாரும் உங்களை குற்றம்சாட்ட மாட்டார்கள் என தெரிவித்த அவர், இந்த வழக்கு விசாரணையில் விலகிக் கொள்வது சிறந்த முடிவாக இருக்கும் என யோசனை தெரிவித்தார்.
இதனையடுத்து, சூர்யகாந்த் கூறுகையில், இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி ஆகும் நிலையில் இல்லாதவர்கள் அமர்வு முன்பு பட்டியலிடப்படும்’ என்றார். மேலும் ஏப்., 7 ம் தேதிக்கு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தார்.
