புதுடில்லி: நெகட்டிவ் அரசியலின் போஸ்டர் பாய் ராகுல், இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து, நாட்டின் நலன்களில் சமரசம் செய்து கொள்வதாக மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.
டில்லியில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது; காந்தி குடும்பம் ஒரு முற்றிலும் சமரசம் செய்து கொள்ளும் அரசியல் குடும்பம். ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சி என்றால் சமரசம் என்றுதான் பொருள். நேரு காலத்தில் தொடங்கி இன்று வரை அவர்கள் வெளிநாட்டு சக்திகளுக்கு உட்பட்டு நாட்டின் எதிர்காலத்தைச் சமரசம் செய்து வருகின்றனர். நெகட்டிவ் அரசியலின் போஸ்டர் பாய் ராகுலும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து நாட்டின் நலன்களை பாதிப்படையச் செய்கிறார்
ராகுல் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பாதுகாப்பு விதிகளை மீறுகிறார். ஜார்ஜ் சொரோஸ் போன்ற இந்தியாவுக்கு எதிரான நபர்களுடன் தொடர்பில் இருக்கிறார். ராகுல் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம், இந்தியாவையும், இந்தியர்களின் நலன்களிலும் சமரசம் செய்து கொள்கிறார். லடாக் போன்ற எல்லைப் பகுதிகளுக்கு செல்லும் போது இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ஷாகிர் மிராலி போன்ற வெளிநாட்டவர்களுடன் உறவை விரிவுபடுத்துகிறார்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, சோனியாவும், ராகுலும் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரத்தைச் செலுத்தினர். பிரதமரை அவமதிப்பது, தேசிய ஆலோசனைக் குழு மூலம் அரசாங்கத்தை நடத்துவது மற்றும் நாட்டின் மீது இடதுசாரி சித்தாந்தத்தைத் திணிப்பது என சோனியாவும், ராகுலும் ஒரு இணை அமைச்சரவையை நடத்தி நாட்டின் நலன்களில் சமரசம் செய்தனர், இவ்வாறு அவர் கூறினார்.
