புதுடில்லி: ‘பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை தயாரிக்கும் என்.சி.இ.ஆர்.டி., அமைப்புக்கு நிகர்நிலை பல்கலை அந்தஸ்து கிடைத்துள்ளது’ என, மத்திய கல்வி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் டில்லியை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது. கல்வி சார்ந்த ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதுடன், மத்திய மற்றும் மாநில பள்ளிகளின் பாடத்திட்டங்களையும் வடிவமைத்து, பாடநுால்களையும் என்.சி.இ.ஆர்.டி., அச்சிட்டு வருகிறது.
தன் அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்காக, நிகர்நிலை பல்கலை அந்தஸ்து கோரி, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவிடம், என்.சி.இ.ஆர்.டி., மூன்று ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்திருந்தது.
பல கட்ட செயல்முறைகளுக்கு பின், இது தொடர்பான அறிக்கையை கடந்தாண்டு மத்திய அரசு யு.ஜி.சி.,யிடம் சமர்ப்பித்தது-. இதைத் தொடர்ந்து, கடந்த ஜன., 30ல் நடந்த 595வது கூட்டத்தில் நிகர்நிலை பல்கலைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 30ல் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: யு.ஜி.சி.,யின் ஒப்புதலை அடுத்து, நிகர்நிலை பல்கலையாக என்.சி.இ.ஆர்.டி., அறிவிக்கப்படுகிறது.
இதில், அதன் மண்டலக் கல்வி நிறுவனங்களான ம.பி.,யின் போபாலில் உள்ள பர்கதுல்லா பல்கலை, ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள எம்.டி.எஸ்., பல்கலை, கர்நாடகாவின் மைசூரு பல்கலை, ஒடிஷாவின் புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலை, மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு மலைப்பகுதி பல்கலை ஆகியவை அடங்கும்.
அதுமட்டுமின்றி, போபாலில் செயல்படும் பண்டிட் சுந்தர்லால் சர்மா மத்திய தொழில்கல்வி நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
நிகர்நிலை பல்கலை அந்தஸ்து வாயிலாக ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் பிஎச்.டி., எனப்படும் முனைவர் பட்ட படிப்புகளை துவங்க என்.சி.இ.ஆர்.டி., உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அமைப்பு வழங்கும் கல்வித் திட்டங்கள் யு.ஜி.சி., பரிந்துரைத்த தரம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
புதிய படிப்புகள் அல்லது கிளை மையங்கள் துவங்க யு.ஜி.சி., வழிகாட்டுதல்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். எவ்வித வணிக ரீதியிலான அல்லது லாப நோக்கிலான நடவடிக்கைகளில் என்.சி.இ.ஆர்.டி., ஈடுபட கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிகர்நிலை பல்கலை அந்தஸ்து பெற்றதை அடுத்து, உயர்கல்வி துறையில் கால் பதிக்கும் அங்கீகாரத்தை பெற்றுள்ள என்.சி.இ.ஆர்.டி., முனைவர் பட்டங்கள் உட்பட பல புதுமையான கல்வி பாடப்பிரிவுகளை துவங்க முடிவு செய்துள்ளது.
