புதுடில்லி: போர் காரணமாக ஈரான் சர்வதேச எண்ணெய் சந்தையில் இருந்து விலகினாலும், உலகளவில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று கேர்எட்ஜ் என்ற பிரபல நிதி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.இது தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஈரான் நாளொன்றுக்கு 350 கோடி பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இது 2025ல் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4 சதவீதமாகும். 2025ம் ஆண்டில் சர்வதேச எண்ணெய் கையிருப்பு 850 கோடி பேரல்களாக இருந்தன. 2026 மற்றும் 2027ம் ஆண்டுகளில் நுகர்வை விட உற்பத்தி அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
போர் காரணமாக, ஈரான் சர்வதேச எண்ணெய் சந்தையிலிருந்து விலகினாலும், உலகளவில் ஏற்கனவே உள்ள உபரி கையிருப்பு, இந்த இழப்பை ஈடுசெய்யும். இதனால், போர் பதற்றங்களால் ஏற்படும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும்.
சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நாளொன்றுக்கு 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்த வழித்தடம் முடக்கப்பட்டால், மாற்று குழாய் வழிகள் மூலம் வெறும் 42 லட்சம் பேரல்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும். அதாவது, சுமார் 16 லட்சம் பேரல் விநியோகம் முடங்கும் அபாயம் உள்ளது.
இரட்டை கோபுர தாக்குதல், ஈராக் போர், இஸ்ரேல் – ஹமாஸ் போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற கடந்த கால நிகழ்வுகள் எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தின. ஆனால், தற்போதைய சூழலில் அதிகப்படியான கையிருப்பு இருப்பதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
