புதுடில்லி: மற்றவர்களைப் போல இல்லை. பிரதமர் மோடியும், நானும் காரியங்களை செய்து முடிப்பவர்கள் என பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டி உள்ளார்.
மேற்கு ஆசியாவில் போர் நடைபெற்று வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருக்கிறது. கப்பல் போக்குவரத்து தடைபட்டு சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தம் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 24ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது பிரதமர் மோடியுடன் மேற்கு ஆசியா போர் தொடர்பாக போனில் பேசினார்.
ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தே வைத்திருப்பதன் முக்கியத்துவம், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நிலவரம் குறித்து அவர்கள் கலந்துரையாடினர். இச்சூழலில், இந்தியாவுடனான அமெரிக்காவின் அற்புதமான உறவு இனிவரும் காலங்களில் மேலும் வலுப்பெறும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார்.
மற்றவர்களைப் போல இல்லை. பிரதமர் மோடியும், நானும் காரியங்களை செய்து முடிப்பவர்கள். இதர பெரும்பாலனவர்களை பற்றி இப்படி கூறிவிட முடியாது என்று டிரம்ப் கூறியிருக்கிறார். இதை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் பதிவிட்டு உள்ளது. அதில், பிரதமர் மோடியின் கையை, அதிபர் டிரம்ப் இரு கைகளால் பற்றிக்கொண்டு இருக்கும் போட்டோ இடம்பெற்றுள்ளது.
