புதுடில்லி:’‘ முந்தைய காங்கிரஸ் அரசு செய்த பாவத்தை தற்போதைய மத்திய அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது,” என பிரதமர் மோடி கூறினார்.
டில்லியில் நடந்த டிவி சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கடந்த 2004 முதல் 2010 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலையில் பெரிய பிரச்னை இருந்தது. ஆனால், அதைப்பற்றியும், நாட்டை பற்றியும் கவலைப்படாத காங்கிரஸ், அதிகரத்தை பற்றி கவலைப்பட்டது.
தவறு என தெரிந்தும்
அப்போது 148000 கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்களை காங்கிரஸ் வெளியிட்டது. எதிர்கால சந்ததியினரை கடனில் ஆழ்த்துவதாக அப்போதைய பிரமதர் மன்மோகன் சிங் கூறினார். எண்ணெய் பத்திரங்களை வெளியிடுவது தவறு என தெரிந்தும் அதனை செய்தனர்.
அப்போது ரிமோட் மூலம் ஆட்சியை நடத்தியவர்கள், தங்களது அதிகாரத்தை காத்துக் கொள்ள தவறான இந்த முடிவை எடுத்தனர். அவர்களிடம் பொறுப்பை யாரும் அவர்களிடம் எடுக்கவில்லை. 2020ம் ஆண்டுக்கு பிறகு இந்த பத்திரங்களுக்கு பணம் திருப்ப செலுத்தப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்த பாவத்தை கழுவி அகற்றும் பணியில் பாஜ அரசு ஈடுபட்டது. இதற்கு முன் இந்தப் பணியை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். 1,48,000 கோடி ரூபாய்க்கு வட்டியும் சேர்த்தால் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை நாடு செலுத்த வேண்டியதாகிவிட்டது. ஏறக்குறைய இரண்டு மடங்கு தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
23 நாட்களில்
உலகம் முழுவதும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இந்தியா தனது வளர்ச்சி பாதையில் முன்னேறி வருகிறது. பிப்.,28 ல்போர் துவங்கியதில் இருந்து 23 நாட்களை திரும்பி பார்த்தால், நாட்டின் கிழக்கு முதல் மேற்கு வரையிலும், வடக்கு முதல் தெற்கு வரையிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிதிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டில்லி மெட்ரோ ரயில் சேவையின் முக்கிய வழித்தடங்கள் துவங்கி வைக்கப்பட்டன.
கோட்டா நகரில் புதிய விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டது. இதுபோன்ற பணிகள் கடந்த 23 நாட்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வளைகுடா நாடுகள் முதல் ஐரோப்பா வரையிலும், வளரும் நாடுகள் முதல் நமது அண்டை நாடுகள் வரையிலும் இந்தியா நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக திகழ்கிறது. சிலர் நாம் யாருடன் இருக்கிறோம் எனக் கேட்டனர். அவர்களுக்க எனது பதில் நாங்கள் இந்தியா உடன் இருக்கிறோம். நாங்கள் இந்தியாவின் நலன், அமைதிக்காக இருக்கிறோம்.
ஆச்சர்யம்
உலகை சுற்றி மோசமான சூழ்நிலை நாளுக்கு நாள் கவலையடைந்து வருகிறது. உலகத்தில் குழப்பம் நிலவும் நேரத்திலும், அதன் தாக்கம் உலகம் முழுவதும் தென்படுகிறது. அந்த நேரத்தில் இந்தியா குறித்து விவாதிப்பது பொருத்தமானது ஆகும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ந்து வரகிறது. புதிய நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. இன்றைய இந்தியா சவால்களை தவிர்க்கவில்லை. அதனுடன் மோதி வருகிறது.
பல நாடுகளில் போர்கள் நடக்கும் நிலையில், பலநாடுகள் இந்தியாவின் கொள்கை மற்றும் திட்டங்கள், பலத்தை பார்த்து ஆச்சர்யப்படுகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
