புதுடில்லி: ”மேற்காசியாவில் நடந்து வரும் போர், நம் நாட்டின் வாசல் வரை வந்துவிட்டது; ஆனால், பிரதமரோ மவுனம் காத்து வருகிறார்,” என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் தீவிரம் அடைந்து உள்ளது.
இந்நிலையில், நம் நாட்டின் சார்பில் விசாகப்பட்டினத்தில் நடந்த, ‘மிலன்’ கடற்படை போர் பயிற்சிக்கு வந்திருந்த ஈரான் போர்க்கப்பல் ஐரிஸ் தேனா, சமீபத்தில் நாடு திரும்பியது.
இலங்கை அருகே சென்றபோது, அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல், ‘டார்பிடோ’ எனப்படும் நீரில் நீந்தி செல்லும் ஏவுகணை மூலம், ஈரான் போர்க்கப்பலை தாக்கியது.
இதில், அந்த கப்பலில் இருந்த ஈரான் மாலுமிகள் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுவரை, 87 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; 32 பேரை இலங்கை கடற்படை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று கூறியதாவது:
உலகம் தற்போது நிலையற்ற கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. நம் நாட்டின் எண்ணெய் வினியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது.
மேற்காசியாவில் நடந்து வரும் போர், நம் கொல்லைப்புறத்துக்கே வந்துவிட்டது. இந்திய பெருங்கடலில், ஈரான் போர்க் கப்பலை, அமெரிக்கா தாக்கி மூழ்கடித்துள்ளது. நம் பிரதமரோ, அது பற்றி எதுவும் பேசாமல் மவுனம் காத்து வருகிறார்.
நம் நாட்டின் தன்னாட்சி அதிகாரத்தை பிரதமர் மோடி அடகு வைத்துவிட்டார்.
இக்கட்டான சூழலில் நமக்கு வலுவான தலைமை தேவை. ஆனால், சமரசம் செய்து கொண்ட ஒரு பிரதமரே நமக்கு கிடைத்து இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
