புதுடில்லி: மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எனது நண்பர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பேசினேன். மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் குறித்தும், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைக்கு திரும்புவது குறித்து விவாதித்தோம். அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஒருங்கிணைந்து ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டில்லி வந்த கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப் ஆகியோருடனும் போர்ப்பதற்றம் குறித்து பிரதமர் விவாதித்து இருந்தார்.
மேலும், ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமதுபின் ஜாயித் அல் நாஹ்யான்
சவூதி அரேபியா பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான்
கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அர்தனி
ஓமன் மன்னர் ஹய்தான் பின் தாரிக்
பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் ஐசா அல் கலிபா
குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்காலித் அல்ஹமத் அல்முபாரக் அல்சபாஹ்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா ஆகியோருடனும் ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
