புதுடில்லி: மேற்காசிய நாடுகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மற்றும் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் நம் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசினார்.
இது குறித்து பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிக்கை:
மேற்காசிய போர் பதற்றத்தைத் தணிப்பதற்கான அவசரத் தேவை மற்றும் துாதரக ரீதியிலான பேச்சுக்கு திரும்புவது குறித்து நண்பர் இமானுவேல் மேக்ரானுடன் பேசினேன்.
மேற்காசிய நாடுகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலைப்பதற்கு ஒத்துழைப்பேன் என்பதையும் வலியுறுத்தினேன்.
சகோதரர் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் ஆக்கப்பூர்வமான உரையாடல் நடந்தது. அப்போது அவருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான மற்றும் தடங்கல் இல்லாத போக்குவரத்து தேவை என்பதையும் அவரிடம் வலியுறுத்தினேன்.
மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், மேற்காசிய நிலவரம் குறித்து விவரித்தேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியான் சார் உடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினார். அங்கு நிலவும் பதற்றத்தை தணிக்கவும் அவர் வலியுறுத்தினார்.
