புதுடில்லி: மேற்கு ஆசியா அல்லது பிற மோதல்களில் நான் எப்போதும் அமைதி விரும்புவோருக்கே ஆதரவளித்து வந்துள்ளேன் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன், ஈரான் நடத்தி வரும் போர் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஆதரவு தெரிவித்து இருந்தார். ”அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஈரான் நடத்தி வரும் போர் விவகாரத்தில், மத்திய அரசு மவுனமாக இருப்பது கோழைத்தனம் அல்ல; சிறந்த ராஜதந்திரம்,” என சசி தரூர் கூறியிருந்தது விமர்சனத்தை கிளப்பி இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக சசி தரூர் செயல்படுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் நிருபர்களிடம் சசி தரூர் கூறியதாவது: மேற்கு ஆசியா அல்லது பிற மோதல்களில் நான் எப்போதும் அமைதி விரும்புவோருக்கே ஆதரவளித்து வந்துள்ளேன். போர் என்பது ஒரு தேவையில்லாத ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் சபையில் அமைதி காக்கும் பணிக்காக நான் பல ஆண்டுகள் செலவிட்டுள்ளேன்; போர்கள் நிகழ்வதை வீரர்கள் மிக குறைவாகவே விரும்புவார்கள் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.
போரில் ஏற்படும் பேரழிவு, துயரம் மற்றும் உண்மையான இழப்புகள் குறித்து அவர்களுக்கு நன்கு தெரியும். போரிடுதல் மற்றும் உயிரைப் பறித்தல் ஆகிய அனுபவங்களைப் பெற்ற வீரர்களிடம் நீங்கள் பேசும்போது, அச்செயல்கள் அவர்களுக்குள் ஏற்படுத்தும் மனவேதனையை அவர்கள் பகிர்ந்துகொள்வார்கள். ஒரு நாட்டின் குடிமகனாகத் தன் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவது என்பது ஒரு விஷயம்.
ஆனால், மக்கள் தினமும் உயிரிழக்கும் வகையிலும், பள்ளிக்குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவிகள் எவ்வித நோக்கமுமின்றித் தங்கள் உயிரை இழக்கும் வகையிலும் ஒரு போரைத் தொடர்ந்து நடத்துவது என்பது முற்றிலும் வேறொரு விஷயம். தற்போதைய நிலையில், போரில் ஈடுபடுவோர், அண்டை நாடுகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதமானது, ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து வரம்புகளையும் கடந்துவிட்டது. இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு சசி தரூர் கூறினார்.
