புதுடில்லி: ராணுவ முன்னாள் தளபதி நரவனே, 65, எழுதி வெளியிடப்படாத புத்தகம், ச மூக வலைதளங்களில் கசிந்து சர்ச்சையான நிலையில், அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகளின், ‘ஆன்லைன்’ சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறித்து டில்லி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே கடந்த, 2019 முதல் 2022 வரை, நம் ராணுவத்தின் தலைமை தளபதியாக பணியாற்றினார். இவர், தன் சுயசரிதை புத்தகத்தை, ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி’ என்ற பெயரில் எழுதி உள்ளார்.
ஒப்புதல்
கடந்த 2020ல் இந்தியா – சீனா எல்லைப் பிரச்னையின் போது, மத்திய அரசு எப்படி செயல்பட்டது என்பது குறித்து புத்தகத்தில் விளக்கமாக எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.’பென்குவின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’ பதிப்பகம் வெளியிட இருந்த இப்புத்தகத்திற்கு, ராணுவ அமைச்சகம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் இந்த புத்தகத்தின் நகல்களை வைத்துக்கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் குறித்து டில்லி போலீசார் சமீபத்தில் வழக் குப் பதிவு செய்தனர்.
இது குறித்து, டில்லி சிறப்புப் பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இப்புத்தகம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் உள்ள இணையதளங்களில் ஆன்லைனில் விற்பனை செய்யப் பட்டது தெரியவந்துள்ளது.
இணையத்தில் கசிந்த புத்தகத்தின் நகலில், சர்வதேச அளவில் வெளியிடப்படும் புத்தகங்களுக்கு வழங்கப்படும், 13 இலக்க தனித்துவ எண் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது, வெளியிட தயாராக இருந்த புத்தகத்தின் நகல் என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
கசிந்தது எப்படி?
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஆன்லைன் புத்தக விற்பனை தளங்களை ஆய்வு செய்தபோது, இதில் பட்டியலிடப்பட்ட அந்தத் தனித்துவ எண், ‘பென்குவின் இந்தியா’வின், ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி’ புத்தகத்தின் பதிப்புடன் ஒத்துப்போய் இருப்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம், நம் ராணுவ அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அனுமதிக்கு முன் இந்த புத்தகம் சர்வதேச சந்தையில் கசிந்தது எப்படி? பல வெ ளிநாட்டு ஆன்லைன் தளங்களில் விற்பனையில் இடம் பெற செய்தது எப்படி?
இது தொடர்பாக சர்வதேச நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வெளிநாடுகளில் ஒத்துழைப்பு அளித்தவர்கள் குறித்தும் டில்லி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
