புதுடில்லி: ‘வாட்ஸாப், டெலிகிராம்’ உள்ளிட்ட தகவல் பரிமாற்ற செயலிகளை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்காக, ‘சிம் கார்டு’ இல்லாத ‘மொபைல் போன்’களில் அவற்றின் பயன்பாட்டை முடக்குவது, கணினியில் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை தானாக, ‘லாக் அவுட்’ ஆவது உள்ளிட்ட மாற்றங்கள் அமலாகி உள்ளன.
நாட்டில், சைபர் குற்றங்கள் மூலம் பொது மக்கள் பணத்தை இழப்பது அதிகரித்துள்ளது. கடந்த 2025ல் மட்டும் டிஜிட்டல் கைது போன்ற ஆன்லைன் மோசடிகள் மூலம், 644 கோடி ரூபாயை மக்கள் இழந்துள்ளனர்.
சவால்
இந்த வழக்குகளை விசாரித்த போது, அதில் ஒரு விஷயம் பொதுவானதாக இருந்தது. சைபர் குற்றவாளிகள் சிக்காமல் இருப்பதற்காக, மொபைல் போன் மற்றும் இணையத்தில், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் வாட்ஸாப், டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட செயலிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருகின்றனர்.
அதன்பின், ‘லாக் இன்’ செய்ய பயன்படுத்திய சிம் கார்டை துாக்கி எறிந்து விடுகின்றனர். இதை, வெளிநாடுகளில் இருந்துகொண்டு செய்கின்றனர். இதனால், அவர்களை கண்டறியும் பணி சவாலானதாக உள்ளது.
இந்நிலையில், ‘சிம் பைண்டிங்’ என்ற புதிய விதியை அமல்படுத்த தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டிருந்தது.
இந்த விதியின்படி வாட்ஸாப், டெலிகிராம், சிக்னல் உள்ளிட்டவை எந்த சிம் எண்ணில் இருந்து பதிவு செய்யப்பட்டதோ அதனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மொபைல் போனில் இருந்து சிம்மை எடுத்துவிட்டால் அதில், ‘வை – பை’ இணைய சேவை இருந்தாலும் வாட்ஸாப் உள்ளிட்டவை முடக்கப்படும்.
சிக்கல்
மேலும், இந்த செயலிகளின் இணைய பதிப்புகளில், ‘லாக் இன்’ செய்யப்பட்டிருந்தால் அவை ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை தானாக ‘லாக் அவுட்’ ஆகிவிடும்.
அதன்பின், பயன்படுத்த மீண்டும் மொபைல் போனில் உள்ள வாட்ஸாப் செயலியில் இருந்து ‘க்யூ.ஆர்.,’ குறியீட்டை ஸ்கேன் செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த விதிகள், மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த, ‘சிம் பைண்டிங்’ விதியால் வெளிநாடு செல்லும் இந்திய பயணியருக்கு சிக்கல் எழுந்துள்ளது. அங்கு, ‘ரோமிங் சிம்’ பயன்படுத்தும் போது வாட்ஸாப்பை அணுக முடியாத சூழல் ஏற்படுகிறது.
அதே போல் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை வாட்ஸாப் உள்ளிட்டவற்றின் இணைய பதிப்பு தானாக ‘லாக் அவுட்’ ஆவதால், பணி ரீதியாக இதை பயன்படுத்துவோர் வேலை சூழலை பாதிப்பதாக தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகையில், ‘இந்திய இணைய மற்றும் மொபைல் போன் சங்கம், பிராட்பேண்டு இந்தியா அமைப்பு ஆகியவற்றிடம் கலந்தாலோசிக்காமல் இந்த விதியை அமல்படுத்தி உள்ளனர்.
இதனால், சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனங்கள் அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதன்பின் மாற்றம் கொண்டு வர வாய்ப்பு உள்ளது’ என்றனர்.
