புனே: புனேவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் வங்கதேச பெண்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வருவதை கண்டறிந்தனர்.
பின்னர் 20க்கும் மேற்பட்ட பெண்களின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் சரி பார்த்தனர். அப்போது சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச பெண்கள் 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் போலி ஆதார் கார்டு மற்றும் பிற குடியிருப்பு ஆவணங்கள் வைத்திருந்ததை பறிமுதல் செய்து நாடு கடத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருவதாகவும், சட்டவிரோதமாக வசித்து வருபவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
