நாகர்கோவில்: ”பா.ஜ., என்ற டப்பா இன்ஜினை நம்பி அ.தி.மு.க., உள்ளது. அ.தி.மு.க., என்ற மூழ்கும் கப்பலை நம்பி தமிழக பா.ஜ., உள்ளது,” என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நேற்று நடந்த அரசு விழாவில் அவர் பேசியதாவது: இனி பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வந்து போவார். இதைப் பார்த்து, தே.ஜ., கூட்டணி கட்சியினரே கலங்கி உள்ளனர். ஏனென்றால், மோடி வந்தாலே, தே.ஜ., கூட்டணி பெரிய வித்தியாசத்தி ல் தோல்வியை சந்திக்கும். மத்திய அமைச்சரவை கூட்டத்தில், குஜராத் மாநிலத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர்; தமிழகத்திற்கு எதுவும் இல்லை.
தேர்தல் காலமாக இருந்தும்கூட மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதுவும் வழங்கவில்லை. அதனால்தான், வரும் தேர்தல் தமிழகத்திற்கும், தே.ஜ., கூட்டணிக்கும் இடையேயான தேர்தல் என கூறுகிறேன். வளர்ச்சி இருக்கும் மாநிலத்தில் பா.ஜ., இருக்காது; பா.ஜ., இருந்தால் வளர்ச்சி இருக்காது.
நாடு முழுதும் சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர். மஹாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் இன்னும் பற்றி எரிகிறது. அசாம் நிலைமை இன்னும் மோசம். அந்த மாநில பா.ஜ., முதல்வர், தனது பொறுப்பையும் மாண்பையும் மறந்து, முஸ்லிம்கள் மீது வெளிப்படையாக வெறுப்பை கக்குகிறார். இப்படிப்பட்ட கட்டமைப்பை, தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்று பா.ஜ.,வினர் தவிக்கின்றனர்.
ஆனால், திராவிட மாடல் அரசு மத நல்லிணக்கத்தை கடைப் பிடிக்கிறது. ‘நாடு முழுவதும் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் தருவேன்’ என்று ஒருவர் வாயால் வடை சுட்டார். இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பழனி சாமி வாய்க்கு வந்தபடி வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்.
‘ பா.ஜ., என்ற ‘டப்பா இன்ஜினை’ நம்பி அ.தி.மு.க., உள்ளது. அ.தி.மு.க. என்ற ‘மூழ்கும் கப்பலை’ நம்பி தமிழக பா.ஜ., உள்ளது. பூஜ்யமும் பூஜ்யமும் சேர்ந்தால் பூ ஜ்யம் தான் வரும். ராஜ்யம் கிடைக்காது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
