மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரி உயிர்த்தியாகம் செய்த பூர்ணசந்திரனின் மனைவிக்கு அரசு வேலை வாங்கித்தரவும், அவரது குழந்தைகளை கேந்திரிய வித்யாலய பள்ளியில் சேர்க்கவும் பா.ஜ., முயற்சித்து வருகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும், தமிழக அரசு ஏற்க மறுத்தது. இதை கண்டித்தும், தீபம் ஏற்றக்கோரியும் மதுரையைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி பூர்ணசந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
மதுரை வரும்போது பூர்ணசந்திரனின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் விரும்பினார். 3 நாட்களுக்கு முன் பூர்ணசந்திரனின் குடும்பத்திற்கு பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் மதுரை பொதுக்கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடி, பூர்ணசந்திரனின் மனைவி இந்துமதி, மகன்கள் சிவனேஷ், இனியனை மேடை அருகே சந்தித்தார். குழந்தைகளிடம் என்ன படிக்கிறீர்கள் என ஆங்கிலத்தில் கேட்டார். இந்துமதியிடம் என்ன வேலை செய்கிறீர்கள் என விசாரித்தார். பூர்ணசந்திரன் உயிர்த்தியாகம் குறித்து ஆறுதல் கூறினார். இச்சந்திப்பு 3 நிமிடங்கள் நடந்தது.
பூர்ணசந்திரனின் இறப்பு பிரதமர் மோடியை மனதளவில் பாதித்தது. பொ துக்கூட்டத்திலேயே, ‘தி.மு.க., அரசின் நேர்மையற்ற தன்மை காரணமாகவே இது நடந்தது. வலியை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் வாய்மையே வெல்லும். முருகபக்தர்களே(பூர்ணசந்திரன்) வெல்வர்’ என பிரதமர் உணர்ச்சிவசப்பட்டார்.
இதற்கிடையே இந்துமதிக்கு ஆசிரியர் வேலை வாங்கித்தர பா.ஜ., முயற்சிக்கிறது. இதுதொடர்பாக இந்துமதி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அளித்த மனு பரிசீலனையில் இருக்கிறது. பூர்ணசந்திரனின் இரு மகன்களையும் மதுரை நரிமேடு கே.வி., பள்ளியில் சேர்க்கவும் பா.ஜ.,வினர் ஆர்வம் காட்டுகின்றனர்.
நேற்றுமுன்தினம் பிரதமரை சந்தித்தபோது மனு கொடுக்க இந்துமதி முயன்றபோது, ‘உங்கள் மனு பரிசீலனையில் உள்ளது. நல்ல பதில் வரும். பிரதமரிடம் கொடுக்க வேண்டாம்’ என பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் பூர்ணசந்திரன் குடும்பம் தங்கள் வாழ்வில் ‘ஒளி’ வீசாதா என நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறது.
