பெங்களூரு: 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த கர்நாடகா அரசு தடை செய்யும் என பட்ஜெட் உரையில் முதல்வர் சித்தராமையா பேசுகையில் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, மாநில அரசுகளும் தங்கள் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்வது வழக்கம். அந்தவகையில் இன்று கர்நாடக அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த 17வது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட் உரையில் முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
*16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த கர்நாடகா அரசு தடை செய்யும். குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதை தடுக்கவும், கல்வியில் செல்போன்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான விதிகள் கொண்டு வரப்படும். முக்கிய துறைகளில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கிறோம்.
* 2025-26ம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.1 சதவீதமாகும். இது தேசிய வளர்ச்சி சதவீதத்தை விட அதிகமாகும்.
* அரசியலமைப்பின் படி கூட்டாட்சி ஆட்சி முறையை கடைபிடிக்காமல், கர்நாடகாவிற்கு மத்திய அரசு அநீதி இழைக்கிறது.
* நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக அரசு பணிக்கு ஆட்சேர்ப்பு தாமதமாக வருவதைக் கருத்தில் கொண்டு, 5 ஆண்டுகள் வயது தளர்வு அளித்துள்ளோம்.
* இந்த ஆண்டு பல்வேறு அரசுத் துறைகளில் 56,432 பதவிகளை நிரப்பும் பணியைத் தொடங்கியுள்ளோம்.
உலக நாடுகளில் ஓர் அலசல்!
சமூக வலைதளங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு தொடர்பாக , உலகளவில் விவாதங்கள் நடந்து வருகின்றன. குழந்தைகள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, சமூக வலைதளங்களை பார்ப்பதற்கு உலகநாடுகளும் தடைகளையும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் கொண்டு வருகிறது.
அந்த வகையில், ஆஸ்திரேலியா , மலேஷியா , பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகள் இதை கவனத்தில் கொண்டு , 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு சமூக வலைதளத்தை முழுமையாக தடை செய்துள்ளது. டென்மார்க் , கிரீஸ் ஆகிய நாடுகளும் இது போன்ற நடவடிக்கைகளை பரிசீலித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
